திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். கடந்த 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. 

அதையொட்டி கைத்தறி தொழிலை மேம்படுத்தவும், கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தவும் கைத்தறி தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினவிழா 07/8/24 அன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன்  குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.       


அதில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நவீன வடிவமைப்புகளை கொண்ட கண்கவர் கைத்தறி ரகங்களான ஆரணி பட்டு சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், லுங்கிகள் மற்றும் துண்டுகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 3 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.50 லட்சம் கடனுதவி, மூலப்பொருட்கள் விநியோக திட்டத்தின் கீழ் 7 கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் தயாரிப்புக்கான கைத்தறி பாஸ்புக் அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.


அப்போது கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த நெசவாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.                                 


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad