திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 32 புதிய பஸ்கள். அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 11 August 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 32 புதிய பஸ்கள். அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


திருவண்ணாமலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 32 புதிய பஸ்களை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் 10/8/24 அன்று தொடங்கி வைத்தனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள ஈசான்ய திடலில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6 மகளிர் விடியல் பயண டவுன் பஸ்கள் மற்றும் 26 புற நகர பஸ்கள் உள்பட மொத்தம் 32 அரசு பஸ்கள் தொடங்கி வைத்தல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 24 புதிய வாகனங்கள் வழங்குதல், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 10/8/24 அன்று நடந்தது.                 

விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ். தரணிவேந்தன், எம்எல்ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் (விழுப்புரம்) குணசேகரன் வரவேற்றார்.


விழாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 32 புதிய பஸ்களை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது. வழிப்பாட்டு தலமான திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இரவு பகலாக கண்காணித்து சிறப்பான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு.அதிகமான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உழைப்பதில் எங்களுக்கு எல்லாம் அவர் தான் ரோல் மாடல்.                                


தனியார் பஸ்களை அரசுடமையாக்கி கிராமங்களுக்கு எல்லாம் பஸ்களை இயக்கியவர் கலைஞர். நாடு முழுவதும் அரசு பஸ்கள் உருவாக கலைஞர் தான் காரணம். அவரது வழியில் முதல்வல் மு.க.ஸ்டாலின்  அரசு பஸ் கழகத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். தலைநகர் டெல்லிக்கு  அருகில் உள்ள ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் போதுமான போக்குலரத்து வசதி இல்லை. சரக்கு வாகனங்களில் மக்கள் பயணிக்கும் நிலை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் குக்கிராமங்களுக்கும்  பஸ்கள் செல்லும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர். அவரது ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் போதுமான பஸ்களை  வாங்கவில்லை எனவே தற்போது பழைய பஸ்களை மாற்றி விட்டு 7200 பஸ்கள் வாங்க முதல்வர் உத்திரவிட்டிருக்கிறார். 


இதுவரை 1500 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. தயாரிப்பு நிறுவனம் புதிய பஸ்கள் வழங்கியதும் 6 மாதங்களில் மற்ற பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து விடும். மின்சார பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் நடைமுறையில் உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைககளை பேச்சு வார்த்தையின் மூலமே இந்த அரசு நிறைவேற்றியிருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்துக்காக ரூ.2500 கோடியை போக்குவரத்துக்கு முதல்வர் வழங்கியிருக்கிறார். ஜவ்வாது மலையில் மகளிர் கட்டணமில்லா பஸ்கள் 2 இயக்கப்படும், என அவர் பேசினார்.                         


அதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்:- திருவண்ணாமலைக்கு திமுக ஆட்சியில் தான் அரசு போக்குவரத்து கழக மண்டலம் கொண்டு வரப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு அதிக லாபத்தை பெற்று தருவது திருவண்ணாமலை தான். எனவே திருவண்ணாமலையில் அரசு போக்குவரத்துக் கழக கோட்டம் அமைக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நிதித் துறையின் ஒப்புதல் பெற நான் உறுதுணையாக இருப்பேன். 


திருவண்ணாமலை மாவட்டத்தின் மீது எப்போதும் தனி அக்கறை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜவ்வாது மலையில் மகளிர் விடியல் பயண பஸ்களை இயக்குவதாக அறிவித்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.                                           


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad