செங்கம் அருகே வாத்து மேய்க்கும் கூலி தொழிலாளியை அடித்து கொன்று ஏரியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 May 2024

செங்கம் அருகே வாத்து மேய்க்கும் கூலி தொழிலாளியை அடித்து கொன்று ஏரியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாத்து மேய்க்கும் கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்து, ஏரியில் சடலத்தை புதைத்த வேலூரை சேர்ந்த மாமன், மச்சான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். லாரி உரிமையாளர். மேலும், வாத்துகளை வளர்த்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனையும் செய்து வருகிறார். 


இவருக்கு சொந்தமான வாத்துகளை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் தோக்கவாடி, கொட்டகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு விட்டு பராமரிப்பது வழக்கம்.இந்த பணியில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சவுடாபள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பாஸ்கரன்(58), அவரது மகன் ஹரிஷ்(27) ஆகியோர் செங்கம் நகரில் கூடாரம் அமைத்து தங்கி மேற்கொண்டு வந்தனர். 


இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஹரிஷ் லாரியை எடுத்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த லாரி உரிமையாளர் ரமேஷின் மகன் விஜயகுமாரன்(38), அவரது மைத்துனர் மேகநாதன்(19) ஆகியோர் கடந்த 9ம் தேதி செங்கம் அடுத்த கடலாடி காவல் நிலையத்திற்கு சென்று அபராதம் செலுத்தி லாரியை மீட்டனர்.லாரியை எடுத்து சென்று விபத்து ஏற்படுத்தியதால் ஆத்திரத்தில் இருந்த இருவரும், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், விபத்து ஏற்படுத்திய ஹரிஷை செங்கம் அடுத்த தோக்கவாடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 


இதில், படுகாயம் அடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரன், மேகநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து, ஏரிக்கரை பகுதியில் ஹரிஷின் சடலத்தை புதைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.இதற்கிடையில், ஹரிஷ் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்து வைத்திருந்த அவர்கள், அந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பதிவு இறந்த ஹரீஷின் தந்தை பாஸ்கரனுக்கு கிடைத்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சிடைந்த அவர் நேற்று முன்தினம் செங்கம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தார்.


அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த விஜயகுமார், மேகநாதன் ஆகியோரது செல்போன் எண்ணை கண்காணித்து வந்தனர்.இதில், இருவரும் திருநெல்வேலியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து திருநெல்வேலி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, விரைந்து சென்ற செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், அங்கே பதுக்கியிருந்த விஜயகுமார், மேகநாதன் ஆகியோரை மடக்கி பிடித்தனர். 


பின்னர், செங்கம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், தங்களது லாரியை எடுத்து சென்று விபத்து ஏற்படுத்தியதால் கோபத்தில் ஹரிஷை தாக்கியதாகவும், அதில் அவர் இறந்துவிட்டதால் செய்வதறியாது ஏரிக்கரையில் புதைத்து விட்டு தப்பிச்சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை தொடர்ந்து, தாசில்தார் முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலையில் நேற்று சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். 


பின்னர், ஹரிஷ் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்து சடலத்தை புதைத்த விஜயகுமார், அவரது மைத்துனன் மேகநாதன் ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வாத்து மேய்க்கும் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் செய்தியாளர் கலையரசு

No comments:

Post a Comment

Post Top Ad