திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 10 May 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு நடத்தினார். ஜிபிஎஸ் கருவி அவசியம். அதிக வேகம் இயக்கினால் பறிமுதல். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி 09-5-24 அன்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.


திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 129 பள்ளிகளை சேர்ந்த 730 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அப்போது வாகனங்களின் தரம், இயக்கும் நிலையில் உள்ளதா, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா, கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதா, காமிரா செயல்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யபட்டது. அதனை தொடர்ந்து குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள், அவற்றை நிவர்த்தி செய்த பிறகு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகே இயக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டது.


இந்நிலையில் திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வுப் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அப்போது வாகனங்களில் அவசர கால கதவுகள் பயன்பாட்டில் உள்ளதா, அவசர நேரத்தில் எளிதில் திறக்க முடிகிறதா என சோதனை செய்தார். வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா பயன்பாட்டில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.


பள்ளிக் குழந்தைகள் செல்லும் பேருந்துகளை பெற்றோர்கள் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். விபத்துகளில் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கு முதலுதவி மருத்துவ பெட்டி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக தடுக்கும் விதமாக தீத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 730 வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது. ஒருசில வாகனங்களில் முதலுதவி பெட்டி பராமரிக்கப்படவில்லை. எனவே அவற்றை சரி செய்ய உத்திரவிட்டிருக்கிறோம். குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தணிக்கை சான்று பெறாத வாகனங்கள் தொடர்ந்து இயக்க அனுமதியில்லை.


பள்ளி குழந்தைகளுடன் செல்லும் போது 50கி.மீ. வேகத்துக்கு அதிகமாக சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு அல்லாமல் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிப்பது தொடர்பான 108 ஆம்புலன்ஸ் மூலமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


மேலும் தீயணைப்புத்துறையின் மூலமாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆய்வின் போது எஸ்பி கார்த்திகேயன், ஏடிஎஸ்பி பழனி, முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, ஆர்டிஓ மந்தாகினி, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad