திருவண்ணாமலைக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 April 2024

திருவண்ணாமலைக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.


திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சித்ரா பௌர்ணமி விழா நாளை (ஏப்ரல் 23) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 (இன்று) மற்றும் நாளை ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 527 பேருந்துகளும் மற்றும் 23ஆம் தேதியான நாளை 628 பேருந்துகளும், மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், 23ஆம் தேதியான நாளை 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.


மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும், நாளை 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளைத் தவிர்த்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட 40 பேருந்துகள், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad