திருவண்ணாமலையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 April 2024

திருவண்ணாமலையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு.


திருவண்ணாமலையில் 31-3-24 அன்று மாலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள சர்க்கார் ஜன்னத் மகாலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஈகைத் திருநாள் இரக்கத்தையும் கருணையையும் போதிக்கிறது. ஈகை திருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும்நோன்பு உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை அளிக்கிறது. 


திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாமிய மக்களின் நலன்கள் பாதுகாக்க திட்டங்கள் தீட்டப்படுகிறது. இஸ்லாமியர்களையும் திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது. மிலாடி நபிக்கு அரசு விடுமுறை வழங்கியதும்,காயிதேமில்லத்துக்கு மணி மண்டபம் அமைத்ததும்,உலமாக்களுக்கு மிதிவண்டி வழங்கியதும்,உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததும், வக்ப் சொத்துக்களை பாதுகாக்க மானியம் வழங்கியதும் திமுக ஆட்சி தான்.                

மேலும் ஹஜ் புனித யாத்திரைக்கு கமிட்டி அமைத்து ஏற்பாடு செய்ததும்,உருது அகாடமி அமைத்ததும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தை உருவாக்கியதும், பள்ளிவாசல்கள் மற்றும் தேவலாயங்கள்  புனரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும் திமுக ஆட்சியில் தான். அதோடு இஸ்லாமியர்கள் அரசு வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்கியது திமுக ஆட்சி தான். குடியுரிமை திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்த போது அதை திமுக கடுமையாக எதிர்த்தது.நாடு சுதந்திரம் அடைவதற்காக அதிகமாக பங்காற்றியவர்கள் இஸ்லாமியர்கள்.            


எனவே இந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என எதிர்த்தோம். ஆனால் அதிமுக எம்பிக்கள் 11 பேர் மற்றும் பாமக எம்பி ஆக இருந்த அன்புமணி ராமதாஸ் உட்பட 11 பேர் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்கள். அதனால் தான் அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் வருவதற்கு காரணமாக இருந்தது அதிமுக. ஆனாலும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார்.       


அரசியலுக்காக, ஓட்டுக்காக, தேர்தலுக்காக அல்ல.இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதில் என்றென்றைக்கும் திமுக தான் துணை நிற்கும். இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும்,பாசிசத்துக்கும் இடையே நடக்கிற போர். ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் நிற்க வேண்டும். அது நம்முடைய கடமையாகும்.இவ்வாறு அவர் பேசினார்.        


இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட துணைசெயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், எம்.இ.ஜமாலுத்தீன், தொண்டரணி ஷெரீப், அயலக அணி ஏ.டபிள்யு. சர்தார் காசீம், பத்திகையாளரும் சமூக ஆர்வலருமான ஹாஜி அ.மு.முஸ்தாக் அகமத் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad