திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாமல் மாணவி தற்கொலை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 22 June 2023

திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாமல் மாணவி தற்கொலை.

திருவண்ணாமலையில் சாதி சான்றிதழ் வழங்காததால் பிளஸ் 2 முடித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். 

பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது பன்னியாண்டி சமுதாயத்துக்கு வழங்கப்படும் எஸ்சி ஜாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. 


இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ராஜேஸ்வரின் உடல்நிலை நேற்று முன் தினம் மோசமடைந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 


இது குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பன்னியாண்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். அப்போது அவர்கள், பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரிக்கு எஸ்சி ஜாதி சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்திய வருவாய் துறையை கண்டித்து முழக்கமிட்டனர். 


மேலும் அவர்கள், ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த லட்சுமணன் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


- செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad